தசாபுத்தி

குகனின் பெருந்தன்மை



கங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில் ஏறினான். ராமன், சீதை, லட்சுமணனை சுமந்து சென்ற, புனிதப் படகல்லவா அது!


படகில் அன்றைய தினம் நாலைந்த புதிய நபர்கள் (ராமரின் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு செல்ல வந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன், குகனிடம் பேச்சுக் கொடுத்தான்.


"அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றன. நாங்களும் அங்குதான் செல்கிறோம். நீ என்னடா வென்றால் இங்கே படகில் துடுப்பு இழுத்துக் கொண்டிருக்கிறாயே! ஏன், உன்னை ராமர் அழைக்கவில்லையா? நீ அந்த வைபவத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவனா?” என்றான்.


குகன் அமைதியாகச் சொன்னான். "ஐயா! ராமபிரானுக்கு என் நினைவு வராதிருக்குமா? 'உன்னோடு சேர்த்து ஐவரானோம்' என்று என்னைத் தன்னுடைய நான்காவது தம்பியாக பாவித்தாரே... அவருக்கா என்னை மறக்கும்?'' நெகிழ்ச்சியுடன் சொன்னான்.


“அப்படியென்றால் ஏன் உனக்கு அழைப்பு விடுக்கவில்லை?"


"பொதுவாக ஒரு திருமணம், ஒரு விசேஷம் என்றால் நெருங்கினவர்களுக்கெல்லாம் ஒரு சில பொறுப்புகளைக் கொடுத்து நிறைவேற்றச் சொல்வார்கள் இல்லையா, அதுபோல எனக்கும் ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் உன்னைப் போன்ற போன்ற மக்களை அக்கரையில் இருந்து படகில் அழைத்துவரும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.


திருமணத்தின்போது இதுபோன்ற பொறுப்பை நிர்வகிக்கும் ஒருவரால் மணமேடைக்குச் சென்று திருமணத்தைப் ' பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். அதுபோலத்தான் எனக்கும்.


நான் மானசீகமாக ராமர் பட்டாபிஷேகத்தைப் பார்க்கிறேன். என் ராமர் என்னைப் பார்க்கிறார். நட்புடன் புன்னகைக்கிறார். 'சாப்பிட்டு விட்டு வெகுமதிகளை வாங்கிச் செல்' என்று பாசத்துடன் சைகை செய்கிறார். அந்த நிறைவை நான் இங்கேயே பெற்றுவிடுகிறேன். வேறு என்ன வேண்டும் எனக்கு?'


அந்த இளைஞன் மட்டுமின்றி, பயணித்த அனைவருக்குமே குகனுடைய பதிலால் கண்களில் நீர் திரண்டது.